யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சரவணை பகுதியில் அமைந்துள்ள செல்லக்கதிர்காமம் ஆலயத்திற்குள் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஒருவர் அத்துமீறி நுழைந்து, ஆலயத்தில் இருந்த விக்கிரகத்தை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்ததாகவும், அதன் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
